கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் – தாய் கைது

கற்பிட்டி- கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (02) அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு  சென்ற கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வறுமை மற்றும் வறுமையினால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக  தாய் தனது குழந்தையை இவ்வாறு கிணற்றில் வீசியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட மேலதிக நீதிவான், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 32 வயதுடைய குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதுடன், அந்த பெண்ணின் கணவனுக்கு இது நான்காவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.டபிள்யூ. எதிரிசிங்கவின் ஆலோசனையில், பொலிஸ் நிலைய குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மில்ரோய் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.