பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை – அமைச்சர் டக்ளஸ் –

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சில தமிழ் கட்சிகள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பொது வேட்பாளர் என்ற கருத்தை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.இதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. அது சரியானதும் நியாயமானதுமாக நான் கருதவில்லை.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் தங்களது சுயலாபங்களுக்காக தீராத பிரச்சினைகளாகவே கடைப்பிடித்து வந்தனர்.

அவர்கள் தமிழ் சமூகத்துக்கு ஏற்ற நடைமுறைக்கு சாத்தியமான யதார்த்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் உள்நோக்கம் கொண்ட சுய இலாபம் கொண்டதாகும்.

அது ஜனாதிபதி முக்கிய மூன்று வேட்பாளர்களுடன் எமது மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி, அதன் பின்பு ஓர் உத்தரவாதத்தினை ஏற்படுத்திக்கொள்ள நாம் அவர்களை இணங்க வைக்க வேண்டும். பொது வேட்பாளர் என்பது ஒரு பொய்த்தனம்.

பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அவருக்குத் தெரியும் இதில் வெற்றி இல்லை என்றபடியினால் தன்னைவிட வேறொரு தலைமைத்துவம் இருக்கக்கூடாது என்று அவர் நினைத்திருப்பார். இன்று தமிழ் கட்சிகள் இவ்வாறான ஒரு கருத்தையே வெளியிட்டு இருக்கமாட்டார்கள் .” என தெரிவித்துள்ளார்.