சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் ஆகிய இருவரையும்  நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆனந்தவர்ணன்,தனது விடுதலைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் தனது தரப்புக் கருத்துகளைக் கூறுவதற்கான வாய்ப்பு  வழங்கப்படாமலேயே விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வழக்குத் தவணை எப்போது என்றுகூடத் தெரியாத நிலையில் தன்னைத் தடுத்து வைத்துள்ளதாகவும் இச்சந்திப்பின் போது ஆனந்தவர்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மூதூரைச் சேரந்த எஸ்.சுதாகரன் என்பவரும் இந்தியாவிலிருந்து திரும்பும்போது கைது செய்யப்பட்டு கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தனது விடுதலைக்காக நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆனந்தவர்ணன் உடல்நலக்குறைவால் அவதியுறுவதாகவும், உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதனால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியதோடு,  இவ்விடயம் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கவனத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.