பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களுக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் என்பவருக்கு தடை உத்தரவு உள்ளதாகவும் எனவே முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வினை நிறுத்துமாறு கூறி தடை உத்தரவை வழங்கியுள்ளனர்.

அத்துடன் ஏனைய அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவ்விடத்தில் இருந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்டஉறவுகளின் சங்கத தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடார்பில் முறைப்படுகளைப் பதிவு செய்ததோடு ஊடக சந்திப்பு ஒன்றையும் செய்திருந்தனர்.