கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (14)ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகார துஸ்பிரயோகம் , அந்த பிரதேச செயலகத்தின் தற்போதைய தேவையாகவுள்ள கணக்காளர் நியமனம், புதிதாக கணக்கு ஆரம்பித்தல், ஏனைய காணி விடயங்கள் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வழங்கியிருந்ததாகவும்  இன்றைய தினம் பிரதமருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் க.சிவலிங்கன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கணேஸ் மற்றும் தமிழரசுக்கட்சி ஆலையடிவேம்பு தலைவர் ஜெகநாதன் ஆகியோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.