ஆழ்கடலில் மூழ்கிய படகு – ஒருவர் உயிரிழப்பு

ஆழ்கடலில் கடற்றொழிலுக்காக வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி  சென்ற படகு மூழ்கியதில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார்.

குறித்த கடற்றொழிலாளர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (17.05.2024) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்கள் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் கடற்றொழிலுக்காக கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர்.இந்த நிலையில், ஆழ்கடலில் படகு உடைந்து நீரிழ் மூழ்கியதையடுத்து அதில் இருந்த கடற்றொழிலாளர்கள் தப்பி கடலில் தத்தளித்துள்ளனர்.

இதன்போது, நேற்று (17) மாலை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் தத்தளித்த கடற்றொழிலாளர்களை கண்டதையடுத்து மூவரை உயிருடனும் ஒருவரை சடலமாக மீட்டதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்ததையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஏனைய இருவரையும் மீட்கப்பட்ட சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு இரவு கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.