காணாமல்போன டயனா கமகே

இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று  கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது.

இதனடிப்படையில் தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் செயற்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் இல்லத்திற்கு தமது அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் சென்றிருந்த போதிலும் அவர் குறித்த வீட்டில் இருக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என அண்மையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து  வெளிநாட்டு பயணத்தடையும் விதித்திருந்தது.

இந்தநிலையில், தமது இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்கான இயலுமையற்றவர் என்பதால் அவர் தமது இலங்கை கடவுச்சீட்டை அண்மையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் மீள ஒப்படைத்ததாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.