இலங்கையிலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்றதாக 40 பேர் கைது: தஞ்சக்கோரிக்கை பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதா?

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டமான மட்டக்களப்பில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக 40 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்திருக்கின்றனர்.

கடந்த மே 18ம் தேதி, மட்டக்களப்பு பகுதியில் நடந்த ரோந்தின் போதும் களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் நடந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, மட்டக்களப்பு கடற்பரப்பில் சந்தேகப்படும் வகையில் இருந்த மீன்பிடி படகு ஒன்றை கடற்படையினர் கண்டுள்ளனர். பின்னர், அப்படகை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியதில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு பயணிக்க முயற்சித்த 19 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

அதே போல், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள தர்மபுரம், மற்றும் புதுக்குடியிருப்பு கடற்கரைகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 40 பேரில் 4 பேர் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் நிகழ்ந்த போர் மற்றும் இனரீதியான அச்சுறுத்தல் காரணமாக கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறான தஞ்சக்கோரிக்கை பயணங்கள் ஆஸ்திரேலிய அரசின் உந்துதலால் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் நிலையில், இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடியால் அவ்வாறான பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அதே சமயம், தற்போது வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் எந்த நாட்டுக்கு செல்ல முயற்சித்தார்கள் என்பது தெளிவுப்படுத்தப்படவில்லை.

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவது என்பது இந்தியாவில் தஞ்சமடையும் பயணம் போல் அல்லாமல், பல்லாயிரம் கிலோ மீட்டர் கடலில் ஆபத்தான முறையில் பயணிக்கும் பயணமாக உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய ஆஸ்திரேலிய அரசு, இவ்வாறு தஞ்சமடையும் அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுத்து நாடு கடத்தி வந்தது. அத்துடன் பல அகதிகளை சுமார் 10 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.