எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை                 

எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை
ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது-
சர்வதேச ஊடகத்திற்கு பிரதமர் பேட்டி
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
ஸ்கைநியுசிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
ஊழல்மற்றும் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதாக பொதுமக்கள் அரசாங்கத்தின் தலைமை மீது குற்றம்சாட்டும் நிலையில் தலைநகரில் இரண்டு மாதங்களிற்கு மேல் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.
முன்னைய நிர்வாகத்தின் பொருளாதாரத்தை வீழ்த்தியதால் தற்போதைய நெருக்கடிக்கு அவர்கள் மீதே குற்றம்சுமத்தவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையின் வரலாற்றில் இது ஒருபோதும் நிகழ்ந்ததில்லை என அவர் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய விதத்தில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்கை நியுசிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
எங்களிடம் டொலர்கள்இல்லை – ரூபாய்கள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி பதவி விலகவேண்டுமா என்ற கேள்விக்கு இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம் இந்த விடயத்தில் நாட்டில் இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றது என பிரதமர் தெரிவித்தார்.
இலங்கை 21வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றத்தை மீண்டும் வலுப்படுத்தும் 19வது திருத்தத்தை நாடு மீண்டும் கொண்டுவரவேண்டும், என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றேன் இது பிரதமரின் அதிகாரங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை என பிரதமர் தெரிவித்தார்.
அதன் பின்னர் அனைத்து கட்சி தலைவர்களும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எதிர்காலம் குறித்த ஏற்பாடொன்றிற்கு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
1948 இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு சந்தித்துள்ள மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு கொவிட் எண்ணெய் விலை அதிகரிப்பு ஜனாதிபதியும் முன்னைய பிரதமரும் பின்பற்றிய வரிநடைமுறைகள் ஆகியவையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடியும்- முதியவர்களும் இளையவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இளையவர்கள் தங்கள் எதிர்காலம் பறிபோவதாக கருதுகின்றனர்-நடுத்தரவர்கக்கத்தை சேர்ந்த முதியவர்கள் தங்கள் வாழ்க்கை முறை வீழ்ச்சியடைவதாக கருதுகின்றனர் – உரமில்லாத விவசாயிகள் என அவர் தெரிவித்தார்.
பொலிஸ்நிலையங்களிற்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு வெளியேயும்,வேறு இடங்களிலும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன இது மக்களின் சீற்றம் விரக்தி நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்தார்.
மக்கள் தற்போது இதற்குமேலும் சுமையை சுமக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் நிச்சயமாக ஸ்திரமான நிலையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மே 9ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை சேதப்படுத்தி தீயிட்டு சூறையாடிய 800க்கும் அதிகமானவர்களை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதியளவு உரம் இன்மையால்நாடு உணவு நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நெருக்கடி காரணமாக 7 பில்லியன் டொலர் கடனை செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து இலங்கை வங்குரோத்து நிலையை அடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளது –
நாங்கள் எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தை உணர்கின்றோம் இது இன்னமும் அதிகரிக்கும் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
விவசாயத்திற்கான போதிய உரம் இல்லை என்பதே எங்களின் முக்கிய கரிசனை எதிர்வரும் பருவகாலத்தில் முழுமையான விளைச்சல் கிடைக்காது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக ஆகஸ்ட் முதல் இலங்கையில் உணவு நெருக்கடிக்கான சாத்தியம் உள்ளது அக்காலப்பகுதியிலேயே உலக உணவு நெருக்கடி உருவாகும்,அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை எப்படி எதிர்கொள்ளப்போகின்றோம் என பார்க்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.