தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேர் கைது

தொடரும் தஞ்சக்கோரிக்கை பயணங்கள்: இலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட  67 பேர் கைது 

இலங்கையின் திருகோணமலை பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்பட்ட 67 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் இருந்து படகு மூலம் வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த மே 23ம் தேதி சல்லிசாம்பல் தீவில் கடற்படையும் நிலாவெளி காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அன்றைய இரவு திருகோணமலை கடல் பகுதியில் பயணித்த மீன்பிடி படகில் இருந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படகில் வெளியேற முயன்றவர்கள் செல்ல முயன்ற நாடு குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதே சமயம் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது என்றும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் இண்டிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதில் கைது செய்யப்பட்டவர்களில் 05 ஆட்கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 57 பேர் ஆண்கள், 07 பேர் பெண்கள், 03 பேர் குழந்தைகளாவர். இவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, ரத்னபுரா, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஆஸ்திரேலிய தினத்தன்று அந்நாட்டு கடல் பகுதியில் இடைமறிக்கப்பட்ட இலங்கை படகு ஒன்றை தொழிற்கட்சி தலைமையில் அமைந்துள்ள ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.