இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு!

 

 

நூருள் ஹுதா உமர்

 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் – அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் தலைமையில் ‘சமகால சவால்களை எதிர்கொள்வதற்கான பல்துறைசார் ஆய்வு’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.

 

இவ்வாய்வரங்கில் சர்வதேச மற்றும் தேசிய பேராளார்கள் பலரும் கலந்துகொண்டனர். பல்துறையினையும் ஊடறுத்துச் செல்லும் சுமார் 60 இற்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வரங்கின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ. ஜௌபர் இம்மகாநாட்டினை நெறிப்படுத்தியதுடன் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்களின் தொடக்க உரையுடன் அங்காரா இல்டின் பயாசிட் பல்கலைக்கழக பேராசிரியர் பாதிஹ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் செய்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹபீபுல் ஹொங்கர் ஆகியோர் மகாநாட்டின் பிரதான உரைகளை நிகழ்த்தினர்.

 

சமகாலத்தில் உலகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு பல்துறைசார் ஆராய்ச்சி அணுகுமுறையினை கையாள்வதன் அவசியம், உலகமயமாதல் செயன்முறையில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் குறித்தும் இவர்களது உரைகள் கவனம் செலுத்தியிருந்தன. தொடக்க நிகழ்வில் ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளின் சுருக்கங்கள் அடங்கிய தொகுப்பு நூல் மின்னியல் இதழாக வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தரம்வாய்ந்த கட்டுரைகளை சர்வதேச எமரல்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் வெளியிட்டுவைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மகாநாட்டின் இறுதி அமர்வில் கலை கலாசார பீடத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தொகுப்புரையினை நிகழ்த்தினார்.

 

ஆய்வரங்கின் ஏற்பாட்டுக் குழு சார்பில் அதன் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம். றிஃப்தி, பொருளாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, ஏனைய குழு அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்ததுடன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், பதிவாளர், நிதியாளர், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.