படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு…

(சுமன்)

2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபைத் தவிசாளரும், டெலோவின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அமரர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டமையும், அவருக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.