வரலாற்றில் மிகவும் கடினமான பரீட்சை : பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன
வரலாற்றில் மிகவும் கடினமான பரீட்சை : பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் வரலாற்றில் 2021 (2022) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை மிகவும் கடினமானதும், சவாலானதுமாக அமைந்தது என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் வருடத்தில் பரீட்சைக்கு முகங்கொடுக்க வேண்டிய மாணவர்கள் 2022 ஆம் வருடத்திலேயே பரீட்சையை எதிர்கொள்ள நேரிட்டது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டு வந்த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதில் மேலும் பல நிர்வாக, பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இதுகுறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன மேலும் தெரிவிக்கையில் :
“கொடுப்பனவுகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக பரீட்சை நிலையங்களில் பல அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கடமைக்கு முன்வரவில்லை. ஆனால் அந்த பிரச்சினைகள் ஒருவாறு தீர்க்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் உள்நாட்டு கலவரங்கள் என பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.
அச்சிடுதல், போக்குவரத்து மற்றும் தடையில்லா மின்சாரம் போன்ற வசதிகளை பெற்றுக் கொள்வது கடினமாக இருந்தது.
காகிதம் மற்றும் மை போன்ற சில மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் இதற்கான செலவுகள் தாங்க முடியாதவையாக இருந்தன.
எவ்வாறாயினும், இத்தனை சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் இருந்தபோதிலும், 3,844 பரீட்சை நிலையங்களிலும் 542 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் 517,496 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். தேர்வை வெற்றிகரமாக நடத்த 45,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் இந்த பரீட்சை வரலாற்றில் சவாலானது என்பது உண்மை என்றார்.

கருத்துக்களேதுமில்லை