அரச ஊடக நிறுவன பதவிகளில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிப்பு : முஸ்லிம் அரசியல்வாதிகள் தட்டிக்கேட்க வேண்டும்.

நூருல் ஹுதா உமர்

அரசாங்க ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி நியமனங்களை ஒருசில தினங்களுக்கு முன்னர் வழங்கி வைத்தார். இந்த நியமனங்களில் முஸ்லிம் தரப்பு முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறையிலும் கல்வித் துறையிலும் ஏனைய கலை, இலக்கிய துறைகளிலும் எத்தனையோ தகுதியான சிரேஷ்டத்துவம் கொண்டவர்களும் கல்வியியலாளர்களும் முஸ்லிம் சமுகத்துக்குள் இருக்கத்தக்கதாக இந்த புறக்கணிப்பு இடம்பெற்றுள்ளமை திட்டமிட்ட சதியாகவே முஸ்லிம் சமுகத்தினரால் பார்க்கப்படுகின்றது என அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கடந்த பல வருட காலமாக இலங்கை சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்து வந்த புரவலர் ஹாசிம் ஒமரும் இந்த முறை எவ்வித பதவிகளிலும் நியமிக்கப்படவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை பொறுத்தவரை முஸ்லிம் சேவையில் ஐவேளை அதான் ஒலிபரப்புக்கு பெருந்தொகை பணத்தை வழங்கி அனுசரனை வழங்கும் பிரபல ஆடை நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால் சிங்கள சேவையில் பௌத்த மத நிகழ்ச்சிகளை அனுசரனை இன்றியே நடத்திச் செல்கின்றனர் என சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் தமது ஆதங்கங்களை பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் அரச ஊடக நிறுவனங்கள் அனைத்திலும் கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும், கட்டுப்பாட்டாளர்களும், அறிவிப்பாளர்களும் பெருந்தொகையான முஸ்லிம் அனுசரனையாளர்களை நெருங்கி நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை பெற்றுக் கொடுத்து வருகின்றனர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று ஓரளவு நஷ்டமின்றி செயற்படுவதற்கு பிரதான காரணம் முஸ்லிம் சேவையில் இடம்பெறும் அனுசரனைகளே என தகவல்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் இந்த தகவல் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகிறது எனும் குற்றச்சாற்றும் இருக்கிறது.

இந்த அரசாங்கத்தின் கெபினட் அமைச்சர் இருக்கும் பிரபல தொழிலதிபரும் பொறியியலாருமான அல்ஹாபிழ் இஸட் ஹாபீஸ் நஸீர் அஹமட், அதுபோல் ஆளும்தரப்பு, எதிர்தரப்பு மற்றும் சுயாதீன தரப்பு முஸ்லிம் எம்.பீக்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையீடு செய்ய வேண்டும் என்பதுடன் முஸ்லிம் சமுகத்துக்குரிய நியாயமான நியமனங்களை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் சமுகத்துக்குரிய உரிமைகளுக்குள் இந்த நியமனங்களும் உள்ளடங்கும் என்பதை நீங்கள் அறியாதவர்களும் அல்லர். ஆகவே இந்த விவகாரத்தில் உடனடியாக சகல முஸ்லிம் அரசியல்வாதிகளும் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.