கிழக்கின் 32 முன்னணி கழகங்களை வீழ்த்தி எப்.எச்.எஸ்.சி “பௌசி கிண்ண” தொடரின் சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை பெற்றுக்கொண்டது.

நூருல் ஹுதா உமர்

40 வருடங்கள் பழமையான சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய “பௌசி கிண்ண”  20 க்கு 20 கடினபந்து கிரிக்கட் சுற்றுத்தொடரின் இறுதியாட்டத்தில் வென்று சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் தனதாக்கி கொண்டது.

சாய்ந்தமருது பொதுவிளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இறுதி போட்டியில் சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து விளையாடிய  சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயித்த 20 ஓவர்களில் 131 ஓட்டங்களை 09 விக்கட்டுக்களை இழந்து பெற்றுக்கொண்டது. சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர் ஷிபான் 30 பந்துகளை எதிர்கொண்டு 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மேலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ஜபீர்கான் 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக்கழகம் சார்பில் றஸ்பாஸ், ரப்ஸான்,அஸ்லம் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகக்ளை வீழ்த்தினர்.

அதனடிப்படையில் 132 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக்கழகம் ஆரம்பம் முதல் தடுமாறி வந்த நிலையில் 16.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 95 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக விளையாடிய நிப்ராஸ் 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். சம்மாந்துறை விளையாட்டுக்கழகம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய றிக்காஸ் மற்றும் பர்ஸாத் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக சம்மாந்துறை விளையாட்டுக்கழக வீரர் றிக்காஸ் தெரிவு செய்யப்பட்டார்.

சாய்ந்தமருது பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழக தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி ஷிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார். மேலும் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், இளைஞர் சேவை உத்தியோகத்தர், அனுசரணையாளர்கள், சாய்ந்தமருது கிரிக்கட் கழகங்களின் சங்க நிர்வாகிகள், சாய்ந்தமருது பிரதேச கிரிக்கட் கழகங்களின் நிர்வாகிகள், பிளையிங் கோர்ஸ் விளையாட்டு கழக நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர். சாம்பியன் பட்டத்தை வென்ற சம்மாந்துறை விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றிக்கேடயத்துடன் 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.