கல்முனை மாநகர சபைக்கு எதிராக நீதிமன்றை நாடவேண்டி வந்தால் நாடத்தயாராக இருக்கிறோம் : கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர்

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச சுகாதார நிலைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ. எல்.எம். நியாஸ் தலைமையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று பகல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், திட்டமிடல் வைத்திய அதிகாரி எம்.சி.எம். மாஹிர், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பஸால் , கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், சாய்ந்தமருது உலமா சபை தலைவர் மௌலவி எம்.எம். சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக அலுவலர் எம். நழீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம். பைசால், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திண்மக்கழிவகற்றல் தொடர்பிலும், வடிகான்களின் முறையற்ற பராமரிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன் கல்முனை மாநகர சபையின் பொறுப்பற்ற தன்மையினாலும், அசமந்த போக்கினாலும் மாநகர மக்கள் எதிர்நோக்கும் நோய் நிலைகள், தொற்றா நோய் ஆபத்துக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு அது தொடர்பில். நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்பட்டது. எல்லா திணைக்களங்களுடனும் புரிந்துணர்வுடனும், நட்புடனும் ஒன்றிணைந்து செயற்பட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதனால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக வழக்குத்தாக்கள் செய்யாமல், சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் புரிந்துணர்வுடன் பணியாற்ற தயாராக இருக்கின்றோம். ஆனால் அவர்களின் பாராமுகம் தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு தேவை ஏற்பட்டால் அதையும் செய்ய தயாராக இருக்கின்றோம். மக்களின் சுகாதாரம் மீது எப்போதும் கரிசனை செலுத்த வேண்டும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் இங்கு தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் முறையற்ற விதத்தில் அகற்றப்படும் திண்மக்கழிவுகள் மற்றும் வாடிகான்களில் நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டமை வடிகான்கள் துப்பரவு செய்யப்படாமை உட்பட பல்வேறு சுகாதார பிரச்சினைகளை ஆதாரங்களுடன் முன்வைத்து சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ. எல்.எம். நியாஸ் உடனடி தீர்வை பெறுவது தொடர்பில் கவனம் செலுத்த சபைக்கு கோரிக்கை முன்வைத்தார்.

கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர் ஆகியோர் உரிய வசதிகளை ஏற்படுத்தி தந்தால் இந்த பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். மாநகர ஊழியர்கள் வேறு பணிக்கு அமர்த்தப்படுவதனாலும் வாகன வசதிகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக மாநகர சபை வேலைகளை சீராக செய்ய முடியாதுள்ளது. மாநகர சபையில் நிர்வாக பிரச்சினைகள் மலிந்து காணப்படுவதனால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலை உள்ளது. வடிகான் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அது ஆணையாளர், பிரதி ஆணையாளரின் பொறுப்பில் உள்ளதாக அறிகிறேன். அவர்களிடம் இது தொடர்பில் அறிவிக்க வேண்டும் என்று கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சத் காரியப்பர் சபைக்கு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர் அல்லது அவர்களின் சார்பில் யாரும் கலந்து கொள்ள வில்லை என்பதுடன் கடந்த கூட்டத்திலும் ஆணையாளர் இடைநடுவில் எவ்வித அறிவிப்புமின்றி எழுந்து சென்றிருந்ததும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.