யாழில் சிறுபோக அறுவடையை மேற்கொள்ள முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்க வேண்டும்-அங்கஜன் எம்.பி கோரிக்கை
சாவகச்சேரி நிருபர்
யாழ் மாவட்டத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக அறுவடை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான எரிபொருட்களை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்;
யாழ் மாவட்டத்தில் சிறுபோக அறுவடையை சிறப்பாக முன்னெடுத்து உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 1,655,202.89 லீட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 84,728.46 லீட்டர் டீசல் ஆகியன தேவைப்படுகின்றன.இது தொடர்பாக யாழ் மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.என குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளையில் எரிசக்தி மற்றும் விவசாய அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.குறித்த கடிதங்களில்;
இந்தியாவில் இருந்து 300,000 பரல்களில் மண்ணெண்ணெய் இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.யாழ்ப்பாணத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஆறுகள்,நீர்த்தேக்கங்கள் இல்லாத நிலையில் நிலத்தடி நீரை நம்பியே விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.எனவே இதனைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யும் மண்ணெண்ணெய்யை முன்னுரிமை அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் அவர் தனது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை