நிந்தவூரில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கும் நடைமுறையை ஒழுங்கு முறையின் கீழ் விநியோகிப்பதற்கான  இலகு திட்டம் அறிமுகம் !!

நூருல் ஹுதா உமர்

எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி ஆராயும் கலந்துரையாடல் நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் தலைவரும் நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான எஸ் எம் பி எம் பாறூக் இப்றாகீம் தலைமையில்  நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் செயலகத்தில் செவ்வாய்கிழமை (05) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நிந்தவூர்  பிரதேசத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வழங்கும் திட்ட குறித்து விரிவாக கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி. ஏ எம் அப்துல் லத்தீப்  நிந்தவூர் பிரதேச  மக்களுக்கு இலகுவாக பெற்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம்  தொடர்பான திட்டம் குறித்து  விளக்கமளித்தார். இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் ஏ எம் அப்துல் லத்தீப்,

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற  வாகனங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விபரங்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு, பதியப்பட்டு (computerized)  அதற்கு வாராந்தம் அல்லது கால இடைவெளியில் நிந்தவூரில்  உள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நிரப்பு நிலையங்களில் பெற்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு முறையான ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு வாகனத்துக்கும் வாராந்தம் எரிபொருள்  நிரப்புவதற்கான அட்டை ஒன்று பொதுமக்களுக்கு வேறாகவும்,. அரச ஊழியர்களுக்கு வேறாகவும் அறிமுகப்படுத்தப்பட்டு அந்த அட்டையை சமர்ப்பிப்பதன் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் வாராந்தம் தேவையான எரிபொருளை குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து வெளியூர்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அல்லாமல் பொதுமக்களுக்கான அட்டைகளே வழங்குவதென்றும், இவர்கள் தமக்குரிய சேவையின் அவசியம் கருதிய வகையில் தேவையான எரிபொருளை அவர்கள் அவரவர் கடமையாற்றும் பிரதேசங்களில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே எரிவாயு சிலிண்டர்களையும் பிரதேச மட்டத்தில் விநியோகம் செய்வதற்கு எரிவாயு நிரப்புவதற்கான அட்டை முறைமை ஏற்படுத்தப்படும்.

இதன் காரணமாக பொதுமக்கள் நீண்ட நேரத்தை வரிசையில் செலவிட்டு பெற்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்கின்ற நிலைமையும் அதேபோன்று அவ்வாறு பெற்றுக் கொள்ளாமல்  காத்திருந்து திரும்பிச் செல்லும் நிலைமையும்  தவிர்க்கப்படுவதோடு ஒரு ஒழுங்கு முறையின் கீழ் இவற்றை விநியோகிப்பதற்கான  இலகுவான திட்டமாக இது அமையும். இதற்காக நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியினர் அனுசரணை வழங்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்த கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம் ஏ எம் தாஹிர், நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் செயலாளர் எம் எஸ் எம் நிப்றாஸ், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் ஏ எல் பைரூஸ், உலமாக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உட்பட நிந்தவூர் அனர்த்த முகாமைத்துவ அணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.