கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தினை தம்வசப்படுத்திய மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி!!

நாடு பூராகவும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டினால்  மக்கள் இரவு பகலாக மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து எரிபொருள் அமைச்சர் அதற்கான தீர்வை வழங்கும் நோக்கில் QR திட்டத்தினை தேசிய ரீதியில் அமுல்படுத்தியதன் பிற்பாடு சிபெற்கே மற்றும் ஐ.ஓ.சி ஊடாக மிக நீண்ட வரிசைகள்
இன்றி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைவாக அண்மையில் இலங்கை ஐ.ஓ.சி நிறுவனமானது QR திட்டத்தினை சிறந்த முறையில் நிருவகிக்கும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கு தடைகள் இன்றி முன்னுரிமை அடிப்படையில் அதிக எரிபொருளை வழங்குவதாக கூறியிருந்த நிலையில் QR திட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தி ஒரே நாளில் அதிக  வாகனங்களிற்கு சீராக எப்பொருளை வழங்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை பட்டியல் படுத்தியிருந்தது.
குறித்த பட்டியல் படுத்தலில் மட்டக்களப்பு நகரிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம் ஒரே நாளில் 1699 வாகனங்களிற்கு எரிபொருள் வழங்கியுள்ளதன் அடிப்படையில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தினையும், கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக மட்டக்களப்பு நகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரும் மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவருமான தேசபந்து எம்.செல்வராசா கருத்து தெரிவிக்கையில்,
குறித்த QR திட்டமானது நடைமுறைக்கு வந்ததன் பிற்பாடு வாகனங்களின் வகைக்கேற்ப வரையறுக்கப்பட்ட அளவுத்திட்டங்களிற்கு அமைவாக அதிகளவிலான வாகனங்களிற்கு தம்மால் எரிபொருளை வழங்க முடிந்திருந்ததுடன், வரிசைகள் இன்றி  மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாது  மக்கள் தற்போது தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதை காண முடிவதுடன், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் குறிப்பாக பொதுமக்கள் தமக்கு உதவி புரிந்தமையினாலேயே தம்மால் சாதிக்க முடிந்திருந்ததாகவும், அனைத்து தரப்பினருக்கும் தமது ஊழியர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில்  தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.