கல்முனை மாநகர சபையினால் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதையடுத்து, அனைத்து மாட்டிறைச்சி கடைகளிலும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் விசேட பணிப்பின் பேரில், மாநகர சபையின் வருமானப் பரிசோதகர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது மறு அறிவித்தல் வரை குறித்த விலைப்பட்டியல் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் உரிய கட்டுப்பாட்டு விலை மீறப்பட்டு, அதிகரித்த விலை விற்கப்படுமாயின் எவ்வித முன்னறிவித்தலுமின்றி குறித்த கடைகள் மாநகர சபையினால் இழுத்து மூடப்படும் எனவும் வியாபாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

அதேவேளை, மாட்டிறைச்சிக் கடைகளில் டிஜிட்டல் தராசு பயன்படுத்துவதற்கு இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதுடன் எதிர்வரும் 01.09.2022 ஆம் திகதி முதல் டிஜிட்டல் தராசு பயன்படுத்தத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.