அனலைதீவு போக்குவரத்து சேவைக்கு புதிய பேருந்து

அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் புதிய பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைவர் ஜெயகாந்தன் ஊடாக சந்தித்து தமது பிரதேத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கடந்த 19ஆம் திகதி கலந்துரையாடியிருந்தனர்.

குறிப்பாக அனலைதீவில் மக்களின் போக்குவரத்துக்காக பாவனையிலிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பழுதடைந்த நிலையில் இருப்பதால் வைத்தியசாலைக்குச் செல்வோர், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களும் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கு புதிதாக ஒரு பஸ் வண்டியைத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேற்படி விடயங்களை கருத்தில் எடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிரதான முகாமையாளர் குணபாலச்செல்வத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

அதன் பிரகாரம் நேற்று யாழ்ப்பாண சாலை முகாமையாளர் குணசீலனால் அனலைதீவுக்கு புதிய பேருந்து ஒன்று கடற்படையினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டு நேற்று முதல் சேவையை ஆரம்பித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.