குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை முன்னெடுத்தபடி வீறு நடை போடுகிறோம்

 

– இணைந்த கரங்களின் இணைப்பாளர் பெருமிதம்

இணைந்த கரங்கள் அமைப்பு மிக குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்த வண்ணம் தொடர்ந்து வீறு நடை போட்டு பயணிக்கின்றது என்று இவ்வமைப்பின் இணைப்பாளர் எல். கஜரூபன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு எமது தமிழ் உறவுகளின் மனித நேய செயற்பாடுகள் மற்றும் பொதுநல பணிகளில் ஈடுபட்டு வருகின்ற இணைந்த கரங்கள் அமைப்பால் அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தை கிராமத்தில் உள்ள கஷ்ட பாடசாலையான விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முக்கியமான அடிப்படை தேவைகள் நிறைவு செய்யப்பட்டன.

இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை இப்பாடசாலைக்கான பெயர் பலகை அன்பளிப்பு செய்யப்பட்டு, பெறுமதியான புத்தக பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அதிபர் எஸ். கிருபைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பேராளர்களாக கோட்ட கல்வி அதிகாரி எம். ஏ. சபூர், ஆசிரிய ஆலோசகர் மற்றும் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் எம். ஏ. எம். ரசித் ஆகியோருடன் இணைந்த கரங்கள் அமைப்பின் சக இணைப்பாளர்களான சேதுநாதபிள்ளை, ரிஸ்வான், தஜன், காந்தன் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

இணைப்பாளர் கஜரூபன் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு

சுமார் 05 மாதங்களுக்கு முன்னர்தான் இணைந்த கரங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்துக்குள் நிறைந்த சேவைகளை ஆற்றி இருக்கின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏராளமான வேலை திட்டங்களை முன்னெடுத்து உள்ளோம்.

இணைந்த கரங்கள் அமைப்பு சோர்ந்து விட போவதில்லை. தொடர்ந்தும் எமது மக்களுக்கான சேவைகளை இன்னமும் காத்திரமான வகைகளில் முன்னெடுத்த வண்ணம் வீறு நடை போடும். தேவை உள்ள அனைத்து தரப்பினர்களுக்கும் உதவுகின்ற வகையில் நாடளாவிய ரீதியில் இணைந்த கரங்கள் அமைப்பு எதிர்காலத்தில் செயற்பட திடசங்கற்பம் பூண்டு இருக்கின்றது.

நாம் கடந்த தடவை இப்பாடசாலைக்கு வந்திருந்தபோது அதிபர் எங்களிடம் விடுத்த வேண்டுகோள்களை நிறைவேற்றி தந்த மகிழ்ச்சியும், திருப்தியும் இன்று எமக்கு இருக்கின்றது. இப்பாடசாலையின் நீண்ட கால தேவைகளை நிறைவு செய்து தந்திருக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.