10 மணி நேர மின் வெட்டு ஏற்படும் சாத்தியம் ; ஜனவரி முதல் நிலைமை தீவிரமாகும்

சி.எல்.சிசில்-

நுரைச்சோலையில் உள்ள நிலக்கரி ஆலைக்குத் தேவையான நிலக்கரியை பெற்றுக்கொள்ள பணம் கிடைக்காததால் நவம்பர் முதல் வாரத்தில் தினமும் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கியுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரை வெற்றிகரமான பதில் கிடைக்கவில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

மேலும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட 21 நிலக்கரிக் கப்பல்கள் உடனடியாக வரவில்லை என்றால் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நிலக்கரி கிடைக்காவிட்டால் பத்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் கூறுகிறார்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டில் 40 வீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வருவதாலும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை வரட்சியான காலநிலை நிலவுவதாலும், மின்சார விநியோகத்தில்  தீவிரமான நிலைமை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்