மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

இலங்கை ஊடக பரப்பில் கருத்தாளமிக்க மற்றும் தீர்க்கதரிசனம் கூறும் கேலிச்சித்திரங்களால் அனைவரையும் கவர்ந்திழுத்து தனக்கெனவொரு முத்திரையை பதித்த முன்னணி கேலிச்சித்திரக்கலைஞர் அஸ்வின் சுதர்சன் மறைந்து ஆறு ஆண்டுகளான நிலையில், அவரை நினைவுகூறும் முகமாக யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது அஸ்வினின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெற்றதுடன், அஸ்வினின் குடும்பத்தினரால் யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கையில் இரண்டாம் ஆண்டில் சிறப்பு கலைமாணி கற்கையைத் தொடரும் ஒருவருக்கு கற்றல் ஊக்குவிப்புக்கான பணத்தொகையாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின் – வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது. இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றை காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.