தற்கொலைத் தாக்குதல்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளதா – அரசிடம் கேள்வி
மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசாங்கம்
இலங்கையில் இதுவரை இல்லாத வகையில் சட்டத்தை கொண்டு வந்து விசேட பாதுகாப்பு வலயங்கள் என பெயரிட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் மீறும் வகையில் பொது மக்களை அடக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.
பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் இதுவரை இல்லாத சட்டத்தை கொண்டுவந்து கொழும்பின் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம்
தற்கொலைப் பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் ஏற்படும் போது அல்லது நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் போது உயர் பாதுகாப்பு வலயங்கள் அவசியம் என்பதை நாம் அறிவோம்.
உயர்பாதுகாப்பு வலயங்களை அரசிடம் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் கொழும்பைத் தாக்கப்போவதாகவோ அல்லது மதஸ்தாபனங்களைத் தாக்கப்போவதாகவோ தகவல் கிடைத்துள்ளதா என்று கேட்க விரும்புகிறோம்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள்
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அதிகாரிகளிடம் தங்களது வருத்தத்தையும் கோபத்தையும் தெரிவிக்க வாய்ப்பும் உரிமையும் இருக்க வேண்டும். மக்களின் உரிமைகளை நிபந்தனையின்றி ஆதரிக்க வலியுறுத்துகிறோம்.
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு நாங்கள் எதிரானவர்கள். ஆனால், மீண்டும் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகையை கைப்பற்ற முயற்சிப்போம் என்று சொன்னால் அதற்கு இடமளிக்கவே மாட்டோம். அவற்றை தேர்தல் மூலம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் காமினி வலேபொட மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை