இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்
இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஒகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 1465 பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டதாகவும்,பட்டியல் அண்மையில் 708 பொருட்களாக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நபர்களின் கோரிக்கைகளை கருத்திற்க் கொண்டு இறக்குமதி கட்டுப்பாடு பட்டியலில் இருந்து பல பொருட்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
“இலங்கை தனது ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் இந்த கட்டத்தில் அதன் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு இன்று ஆய்வு விஜயமொன்றை மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை