நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ

அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் நிறைவேற்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு அரசியல் ரீதியில் மீண்டும் பலம் பெறுவோம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

‘ஒன்றிணைந்து எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும்,2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றது.பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ராஜபக்ஷர்களுக்கு முழுமையான ஆணையை வழங்கினார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் எடுத்த ஒருசில தீர்மானங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு  ஒரு காரணியாக உள்ளது.விவசாயத்துறையில் சேதன பசளை திட்டத்தை ஒரே கட்டமாக அறிமுகப்படுத்தியமை பொருத்தமற்றதாகும்.

விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு பொருளாதாரத்துக்கும் தாக்கம் செலுத்தியது.எமக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்பை எம்மால் நிறைவேற்ற முடியாமல் போனது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதார நெருக்கடி கட்ந்த மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

போரட்டம் மீது எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை,மாறாக போரட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் தான் பிரச்சினை உள்ளது.போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மற்றும் போராட்டத்தில் முன்னிலை வகித்தவர்கள் தான் தற்போது அரச நிறுவனங்களின் பிரதானியாகவும்,அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலும்,ஜனாதிபதியின் பணிக்குழு பதவிகளிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு நாம் தான் காரணம் என குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.30வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து,நாட்டை அபிவிருத்தி செய்ததா நாங்கள் செய்த தவறு,உண்மையினை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

எமக்கு எதிராக தற்போது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.தேசிய நீதிமன்றங்களிலும்,சர்வதேச நீதிமன்றங்களிலும் எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் அதனையும் வெற்றிக்கொள்வோம்.சகல சவால்களுக்கு முகம் கொடுத்து அரசியல் ரீதியில் முன்னேற்றமடைவோம்.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு 69 இலட்ச மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.முன்னாள் ஜனாதிபதி உட்பட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.