லலித்-குகன் கடத்தல் வழக்கு! கோட்டாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கலான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் நோட்டீஸ் வழங்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.

இந்த மனு இன்று (19) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் கோத்தபாய ராஜபக்ச சார்பாக சட்டத்தரணி எவரும் ஆஜராகவில்லை.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு அறிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 செப்டெம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு டிசம்பர் 10, 2011 அன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் எனவே யாழ்.நீதவானின் தீர்ப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி கோட்டபாய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது முடிவை அறிவித்த போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்ததால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என தீர்ப்பளித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இல்லாத நிலையில் தற்போது அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தற்போது உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.