மொழி மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரமில்லை!…

மொழி மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமாயின் சட்டத்துக்கு அமைவாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் பட்டத்தினை பறக்கவிட்டு சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த பட்டம் பறக்கவிடும் நிகழ்வில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதனை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சட்டத்திற்கு முரணானது என அவர் குறிப்பிட்டார்.

மொழி சுதந்திரத்திற்கும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமாயின் சட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் காணப்படுவது அவசியமாகும்.

அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சுதந்திரம் காணப்படுகின்ற நிலையில், அதனையும் மீறி வன்முறையில் ஈடுபட்டால் மாத்திரமே பொலிஸார் ஆர்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன மற்றும் மத ஒற்றுமையை பாதுகாத்தல், நீதிமன்றிற்கு அவமதிப்பினை தடுத்தல், நாடாளுமன்ற சிறப்புரியை பாதுகாத்தல், ஆகியனவற்றிற்கு எதிராக தூண்தலாக செயற்பட்டால் 15.2 அரசியலமைப்பிற்கமைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.

ஆனால் அதற்கான சரத்துக்கள் சட்டப்பரிந்துரைகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பது அவசியமாகும். எனினும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆர்பாட்டத்தினை ஒடுக்குவதற்கோ அல்லது கருத்து மற்றும் மொழி சுதந்திரத்திற்கு கட்டுபாடுகளை விதிப்பதற்கோ எவ்வித அதிகாரங்களும் இல்லை.

எதிர்காலத்தில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க பிரத்தியேக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.