15 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் கிடைக்கவில்லை – தொழிலாளர்கள் போராட்டத்தில்

தீபாவளி முற்பணம் ரூபா 15000 ரூபா தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அத்தொகையை வழங்காமல் 5000 ரூபா அல்லது பத்தாயிரம் ரூபா என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக இன்று அறிவித்ததை அடுத்து இத்தோட்டத்தை சேர்ந்த 150இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு முன்பாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதோடு  தொழிலாளர்கள் பணிகளையும் புறக்கணித்து வீடு  திரும்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தாம் முறையாக வேலை செய்தோம் , மேலும்  எமக்கு வழங்கப்படும் முற்பணம் மாத சம்பளத்தில் அறவிடப்படும்.  பெருந்தோட்ட கம்பனிகள்  15 ஆயிரம் ரூபா தருவதாக கூறியிருந்த போதிலும் எமது  தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என  தெரிவித்தனர்.

விலைவாசி அதிகரிப்பு பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் போது எவ்வாறு தீபாவளியை கொண்டாட முடியும். எனவே தோட்ட நிர்வாகம் உடனடியாக தீபாவளி முற்பணத்தை முறையாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தாம் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்போம் என தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எச்சரித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.