ஜனநாயகப் பொன் விருது பெற்ற இரா.சம்பந்தனுக்கு இ.தொ.கா. நேரில் சென்று வாழ்த்து!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்ட மான்,பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், போஷகர் சிவராஜா,பிரதித் தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


இரா.சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக இவ்விருது பல வருடங்களுக்கு முன்னதாகக் கிடைத்திருக்க வேண்டியது என்றும்,இவ்விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகிறது எனவும் இவ்விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இ.தொ.கா. தெரிவித்துள்ளது.

இரா.சம்பந்தன் இ.தொ.காவின் வாழ்த்துகளுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், தனக்கும் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் இடையிலான நட்புறவையும் நினைவுபடுத்தினார்.

மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல அறிவுபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம். மலையக மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனை படைத்தவை என்றும், அரசாங்கத்தால் மலையக மக்களின் பிரஜா வுரிமை பறிக்கப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசாங்கத்துக்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிகொண்டு, மலையக மக்களுக்காக பிரஜாவுரிமையை பெற்றுக்கொடுத்து அவர்களை ஓர் ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக சமூக மேம்பாட்டுக்காக தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்