மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் – ஜனாதிபதி உறுதி

ஜனாதிபதி செயலகத்தின் வடக்குக்கான உப அலுவலகம் வவுனியாவில் திறப்பு; மாகாண மட்டத்தில் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண குழுக்கள் – ஜனாதிபதி உறுதிஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி செயலகத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் காணி, வீடுகள், சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் எட்டு குழுக்கள் நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணி தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அதற்கேற்ப தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (19) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாணத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.மாகாணத்தில் காணி, வீடமைப்பு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டது.

வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்த ஜனாதிபதி, இந்த முயற்சிக்கு வடமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.வடக்கில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

இதேவேளை, 1994 ஆம் ஆண்டு செட்டிக்குளம் பகுதியில் குடியேறிய தமிழ் மக்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.செட்டிகுளம் காணி பிரச்சினையை மூன்று மாதங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கு தலையிடுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் நீதி அமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் சில விவசாய நிலங்களை சுவீகரிப்பதன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீடமைப்புப் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதுடன், மூன்று மாவட்டங்களிலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் நிர்மாணப் பணிகள் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். நாடுமுழுவதும் பல வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான உடனடித் தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா குளம் மற்றும் திருக்குளம் குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களின் அவலநிலைகள் மற்றும் தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எடுத்துரைத்தார்.

மாவட்டங்களில் உள்ள குளங்களை சீரமைத்தல், உரப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, விநியோகப் பணிகளை சீர்படுத்துதல் உள்ளிட்டவை இக்கூட்டத்தில் முக்கிய விடயங்களாக இருந்தன. வடக்கு மாகாணத்தில் நிலவும் சுகாதாரத் துறை தொடர்பான கவலைகள் மற்றும் மருத்துவர் பற்றாக்குறைக்கு தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும், மண்ணெண்ணெய் விநியோகத்தில் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் விளக்கமளித்தார். அது தொடர்பில் அவசர விசாரணைகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுகா விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.