நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் போலி இரசாயனப்பசளை : கலப்படம் செய்யும் நிலையம் சுற்றி வளைப்பு

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்திலுள்ள அரிசி ஆலையொன்றில் மறைத்து வைத்து கலப்படம் செய்யப்பட்ட 1.5 டொன் எடையுள்ள போலி இரசாயனப்பசளைகளை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்

இச்சம்பவம் இன்று 2022.11.24ம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து இராணுவப் புலனாய்வு பிரிவினருடன் திருக்கோயில் விசேட அதிரடிப்படை அதிகாரி ஐ.பி.கன்னங்கர தலைமையிலான குழுவினரே குறித்த பிரதேசத்தில் பதுங்கி இருந்து இச்சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.

இத்திடீர் சுற்றிவளைப்பின் போது, MOP எனும் பெயரில் போலியாக கலப்படம் செய்து விற்பனைக்கு பொதி செய்யப்பட்டுக் கொண்டிருந்த கலப்படமான இரசாயனப் பசளைகளை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியளிக்கப்பட்ட பசளையுடன் உப்பு மற்றும் இதர பொருட்களை சட்டவிரோதமாகக் கலந்து பொதி செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டவிரோத பசளையும் கைப்பற்றப்பட்டு களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இச்சட்டவிரோத இரசாயனப்பசளை கலவை நிலையமானது கல்முனைகுடியைச்சேர்ந்த நபருக்குச் சொந்தமான அரிசி ஆலை என தெரிய வந்துள்ளது.

அத்துடன், இங்கு போலியாக கலப்படம் செய்யப்படும் பசளைகளை பொதி செய்வதற்காக அரச இலட்சினை பொறிக்கப்பட்டு தயார் நிலையிலிருந்த பக்கெட்டுகளும் பசளை பேக்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் சட்டவிரோத பசளையையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இப்பிரதேசத்தில் போலியான இரசாயன பசளைகளை விவசாயிகளுக்கு வழங்கி, கொள்ளை இலாபமடையும் நோக்கில் இம்மோசடி இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.