இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டம் ஆறு வாரங்களில் நிறைவுபெறும் -காஞ்சன விஜேசேகர
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் ஆறு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் தொடர்பிலான கடினமான காலம் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டத்திற்கு அமைய இரண்டு திருத்தங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சார சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தங்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களித்ததாகவும், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள மின்சாரச் சட்டத் திருத்தங்கள் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதனால் அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் வற்புறுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகளை கொண்டு வர நியமிக்கப்பட்ட குழு, அந்த நிறுவனத்தை 14 சுயாதீன நிறுவனங்களாக பிரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில், இலங்கை மின்சார சபையையோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையோ தனியார் மயமாக்குவது கிடையாது என குழுவின் உறுப்பினர் கலாநிதி சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை பிரிக்கப்படும் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அவற்றின் வளங்களும் அரசாங்கத்திடம் இருக்கும் எனவும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யமாட்டோம் எனவும் அண்மையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
I
கருத்துக்களேதுமில்லை