கூட்டத்துக்கு தாமதமாக வந்து சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர்

இலங்கை அமைச்சர்கள் கூட்டங்களுக்கு தாமதமாக வந்ததாக கொரிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, சமூக ஊடகங்களில் தமக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், காணொளி பகிரப்பட்டு வருவதாகக் கூறி, குற்றப்புலனாய்வுத்துறைக்கு செல்லவுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் கூறியிருந்தபோதும், இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் முன்னிலையாக தவறிவிட்டார்.

தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று பிற்பகல் 1.50க்கு செல்லப்போவதை செய்தியாக்க வருமாறு அவரின் அமைச்சு ஊடகங்களுக்கு அறிவித்தல் விடுத்திருந்தது.

 

எனினும் இன்று பிற்பகல் 1.50 மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர், 2.30 மணியாகியும் கூட அங்கு செல்லவில்லை. கடந்த புதன்கிழமை கொழும்பில் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் மற்றும் அவரது அதிகாரிகளை தென் கொரிய பேரிடர் நிவாரண அறக்கட்டளையின் தலைவர் சோ சுங் லியா கண்டித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன

இருப்பினும், கொரிய அதிகாரியின் அறிக்கையை மேற்கோள் காட்டி தன்னை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

திட்டமிடப்பட்ட கூட்டத்தை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்குவது நல்ல அறிகுறி அல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். தென்கொரியாவில் இது நடந்திருந்தால், இதுபோன்ற அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று தென்கொரிய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எனவே இதுபோன்ற அமைச்சர்களை சந்திப்பதில் எந்த பயனும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு கூட்டம் திட்டமிடப்பட்டால், அது அந்த நேரத்தில், அது ஆரம்பிக்கப்படல் வேண்டும். அத்தகைய அமைச்சர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், அவர்களை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று லியா தெரிவித்திருந்தார்.

இலங்கையில் பொய் சொல்வதும் வாக்குறுதி கொடுப்பதும் சாதாரண விடயமாகி விட்டது, அது அவர்களின் கலாசாரத்தின் அங்கமாகிவிட்டது. இலங்கையில் உள்ளவர்களால் அந்தப் பழக்கத்தை மாற்ற முடியாவிட்டால் நாடு வெளிநாட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

குறித்தக் கூட்டம் முற்பகல் 9 மணிக்கு ஆரம்பிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முற்பகல் 9.30 மணிக்குப் பிறகு அமைச்சர், அந்தக் கூட்டத்துக்கு சென்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.