யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!
யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார்.
” யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா” எனும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று (06.01.2023) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், நடைபெற்ற ” இலங்கை தமிழ் சினிமா நேற்று , இன்று , நாளை ” எனும் தலைப்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
அதில் கலந்துக்கொண்ட ஒரு இயக்குனரை தவிர ஏனையோர் பெரும்பாலும் ஆங்கிலத்திலையே உரையாடி இருந்தனர்.
நிகழ்வை நடத்திய அனோமா பொன்சேகா ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடி இருந்தார். இது தொடர்பில் பார்வையாளர் ஒருவர் ,” இங்கே தமிழர்களே அதிகளவில் உள்ளனர்.
கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளவர்களும் தமிழ் மொழி பேச தெரிந்தவர்களாக உள்ள போது ஏன் ஆங்கிலத்தில் உரையாடல் இருக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த இயக்குனர் அனோமா, இது சர்வதேச திரைப்பட விழா அதனால் ஆங்கிலத்தில் உரையாடுவோம்” என தொனிப்பட பதில் அளித்துள்ளார்.
இதன்போது , சர்தேச திரைப்பட விழாவாக இருந்தாலும் , யாழ்ப்பாணத்தை பிரதி பலிக்கும் படங்கள் மற்றும் “யாழ்” இசைக்கருவி என்பவற்றை இலட்சனையாக (logo) விளம்பரப்படுத்தி “யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா” என்று யாழ்ப்பாணத்தில் நடத்தும் போது, தமிழ் மொழியை புறக்கணிப்பது போன்று நடந்து கொள்வதுடன், ஏன் தமிழ் மொழியில் உரையாடல் நடத்தினீர்கள் என கேட்டுள்ளனர்.
இந்நிலையில் “இதொரு சர்வதேச திரைப்பட விழா, அதனால் ஆங்கிலத்தில் கதைப்போம்” என பதில் அளித்தது கண்டனத்திற்கு உரியது என பார்வையாளர் ஒருவர் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதேவேளை மற்றுமொரு பார்வையாளர் , திரைப்பட விழாவின் ஆரம்ப நிகழ்வை அடுத்து திரையிடப்பட்ட சிங்கள மொழி திரைப்படத்தில் , பேருந்தில் பயணிக்கும் , தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த சிறுவன் ஒருவர் இராணுவ சீருடையை ஒத்த சீருடை அணிந்து கையில் விளையாட்டு துப்பாக்கியுடன் பயணிப்பது போன்றதொரு காட்சி இருந்தது. அதற்கும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்.
அதேவேளை , கடந்த முறை யாழில் இருந்து முஸ்லீம் வெளியேற்றம் குறித்து படமாக்கப்பட்ட படம் குறித்து விமர்சனங்களை முன்வைத்த போது தன்னை “புலியின் வால்” என கூறி தன்னை விமர்சித்து , தனது கருத்தை தெரிவிக்க விடாது தடுக்கப்பட்ட சம்பவத்தையும் அவ்விடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ் சினிமா தொடர்பில் கதைக்கும் போது , நிதர்சனம் வெளியீடுகள் பற்றி எவரும் கருத்துக்களை முன் வைக்காதது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை