இம்முறை அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் – சாணக்கியன் நம்பிக்கை!

ஒற்றுமையுடன் செயற்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வட்டாரங்களை கைப்பற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாகவே முடித்துள்ளோம். இதற்கு சிறந்த உதாரணமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியினை குறிப்பிடலாம்.

தமிழரசு கட்சி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுக்களும் நிராகரிக்கபடவில்லை.

குறிப்பாக சொல்லப்போனால் இந்த தேர்தலை பொறுத்தவரையில் அதிகளவான உள்ளுராட்சி சபைகளில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 76 வட்டாரங்களில் வெற்றி பெற்ற நாம் இம்முறை 100 இற்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசு கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை.

கடந்த காலங்களில் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போது, ஆட்சியமைப்பதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்தோம்.

எனினும், எங்களுடைய தந்திரமான நடவடிக்கை காரணமாக இம்முறை எந்தவொரு ஒட்டுக்குழுவின் ஆதரவும் இல்லாமல் ஆட்சியமைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.