நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் விஷேட கூட்டம்
இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டமொன்று நடத்தப்பட்டது.
ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை எட்டுவதற்காக இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது விபத்து இடம்பெற்ற நானுஓயா ரதல்ல வீதியை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே ஞாயிற்றுக்கிழமை (22) அவதானித்ததாக குறிப்பிட்ட நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தற்போது நடைமுறையில் இருக்கும் நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும், குறித்த வீதி மிகவும் செங்குத்தாக இருப்பதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த (வெள்ளிக்கிழமை) குறித்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 சிறுவர்கள் அடங்கலாக 7 பேர் உயிரிழந்ததையும் நினைவுபடுத்தினார்.
இவ்வீதி தொடர்பாக எதிர்வரும் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தின் போது முக்கிய கவனம் செலுத்தி நிரந்தர முடிவு எடுக்கப்படும் என இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இவ்விஷேட கூட்டத்தில் வீதியில் அதிகார சபை பிரதான பொறியலாளர் , உதவிப் பொறியலாளர் உட்பட பல முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை