உயர்தர பரீட்சை எழுதச் சென்ற காதலி மீது அசிட் வீசிய 21 வயது காதலன்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக முச்சக்கரவண்டியில் தனது தந்தையுடன் பரீட்சை நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவியின் மீது அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞன் ஒருவர் அசிட் வீச முயன்ற சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது

குறித்த இளைஞன் அசிட் வீச முற்பட்ட போது அசிட் கொட்டியதில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞன் ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளாகி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெரிய வருவதாவது:-
குறித்த மாணவி கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளை பரகம்மன பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மாணவியின் கழுத்தை பிடித்து நெரித்ததோடு அவரது முகத்தில் அசிட் வீச முயற்சித்துள்ளார். அப்போது மாணவியின் தந்தை, இளைஞருடன் சண்டையிட்டதால் ஆசிட் மூவர் மீதும் கொட்டியு ள்ளது. இதனையடுத்து மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது மகள் சில காலமாக குறித்த இளைஞருடன் காதல்தொடர்பில் இருந்ததாகவும் அதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்ததாகவும் மாணவியின் தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் மகள் கல்வியை தொடர்வதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததுடன், மகள் வேறு ஒருவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு கூட குறித்த இளைஞன் தனது மறுப்பை தெரிவித்ததாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலனின் கடுமையான விதிமுறைகளால், அந்த இளம்பெண் உறவை முறித்துக் கொள்ள முயற்சித்ததால், ஆத்திரமடைந்த இளைஞன், மாணவி மீது ஆசிட் வீச்சு நடத்த முயன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.