13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி

“அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் போது இதனைத் தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண பொலிஸ் ஆணைக்குழுவுக்குப் பதில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை தான் நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 8ஆம் திகதி முன்வைப்பார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-

“நிறைவேற்று அதிகாரம் கொண்டது எனது பதவி. அந்தவகையில் இருக்கும் சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன். அரசமைப்பில் 37 ஆண்டுகளாக 13ஆவது திருத்தம் உள்ளது. நான் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டுமானால் யாராவது 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்யவேண்டும்.

இந்த இரண்டில் ஒன்று நடக்கவேண்டும். 13ஐ இல்லாது ஒழிக்காவிட்டால் அதனை நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும். தனிப்பட்ட வரைவைக் கொண்டுவந்து யார் வேண்டுமானாலும் அதனை நீக்க முயற்சிக்கலாம். நாடாளுமன்றத்தில் அதற்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அப்போது நான் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நேரிடும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதால் நாடு பிளவுபடாது. இந்தத் திருத்தம் குறித்து 5 நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி, இந்தத் திருத்தத்தின்படி நாம் ஒற்றையாட்சியிலேயே இருக்கின்றோம்.

ஏனைய இனங்களுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு நான் உடன்படுகின்றேன். நாம் உருவாக்கி வைத்துள்ள மாகாண சபைகளுக்கு இலண்டன் மாநகர சபைக்கு உள்ள அதிகாரம் கூடக் கிடையாது. அங்கு இதைவிட கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இந்த 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதால் இது சமஷ்டி ஆட்சி முறையாகிவிடாது” – என்றார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ச, பவித்ரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்தன தேரர், திஸ்ஸ விதாரண, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்த்தன, துமிந்த திஸாநாயக்க, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சி.வி. விக்னேஸ்வரன், சுரேன் ராகவன், சரத் வீரசேகர, சிவநேசத்துரை சந்திரகாந்தன், சாகர காரியவசம், டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, ஏ.எல்.எம் அதாவுல்ல, ரிஷாத் பதியுதீன், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.