சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார் – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் வீட்டுக்குள் வந்து தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார்.தற்பொழுது ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் வேறு மூன்று கட்சிகளுடன் இணைந்து தனியான ஒரு கூட்டணியினை அமைத்துள்ளன. இலங்கை தமிழரசு கட்சி தனியாக தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டு எல்லாம் ஒரு தேர்தலை மையப்படுத்தியே முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் தமிழ் தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்தால் மாத்திரமே தீர்வு தொடர்பில் நாங்கள் சிந்திக்க முடியும். இவ்வாறான நிலையில் தீர்வு பற்றி சிந்திக்க முடியாது.

செல்வம் அடைக்கலநாதன் சுமந்திரனின் பெயரை குறிப்பிட்டு வீட்டுக்குள் ஆமை வந்து விட்டது. வீட்டுக்குள் சுமந்திரன் வந்துவிட்டார்.அதனால் தான் கூட்டமைப்பு இவ்வாறு இருக்கின்றது என பெயரை கூறி குறிப்பிடுகின்றார். ஆனால் சுமந்திரன், பெயரைக் குறிப்பிடாது தூள் விற்பவர்கள், காட்டி கொடுத்தவர்கள், தலையாட்டியவர்கள் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் துணிவிருந்தால் பெயரைக் குறிப்பிட்டு கூறியிருக்க வேண்டும். ஒருவரைப் பற்றி கூறும் போது அவருடைய பெயரை விழித்து கூறினால் தான் அது அவரை சென்றடையும்.ஆனால் சுமந்திரன் யாரையோ கூறுவது போல் கூறி இருக்கின்றார். ஏன் அவ்வாறு கூறினார் என எனக்கு தெரியவில்லை.

தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தன் இல்லை. தேர்தலின் பின்னர் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபடும் என்று நினைப்பது சாத்தியமில்லாத விடயமாக காணப்படுகின்றது. தேர்தலில் தனித்தனியாக கேட்கும் போதே இவ்வாறு மோதிக் கொள்ளும் அணியினர், தேர்தல் முடிய மீண்டும் வந்து ஒன்று சேர்வார்களா என்ற அச்சம் காணப்படுகின்றது.

எனினும் தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. தமிழ் தேசியத்தை சிதைக்கவிடாது எதிர்கால சந்ததியினரிடம் கையளிக்க வேண்டும்.அதாவது இளைஞர் யுவதிகளிடம் கையளிக்க வேண்டும்.அதுவரையாவது தேசியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எம் அனைவரது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.