ஜே.ஆர் ஜெயவர்தனா செய்யாததை அவரது மருமகன் ரணில் செய்ய முயல்கிறார் – குற்றச்சாட்டு!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர் ஜெயவர்தனாவே முழுமையாக நடைமுறைப்படுத்த முயலாத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க முழுமையாக நடைமுறைப்படுத்த முயல்வதாகவும் தெரிவித்தார்.

ஐ.எம்.எப் கூறிய வழியிலேயே பயணிப்பதாகக் கூறி, வரிகளை கடுமையாக அரசாங்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள்.

13ஆவது திருத்தச் சட்டம் ரணில் விக்ரமசிங்கவின் மாமனாரான ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். இச்சட்டம் கொண்டுவரும்போது ஆட்சியிலிருந்த ஜே.ஆருக்கு மக்கள் ஆணை கிடையாது. ஜே.ஆர் கூட இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால், ரணில் தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தப் பார்க்கிறார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவுக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தது 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அல்ல; மாறாக புதிய அரசியலமைப்பு ஊடாக இனப் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதற்கே வாக்களித்தனர்.

நாட்டு மக்கள் மறந்துபோயுள்ள இனவாதத்தை இதனூடாக ரணில் தூண்டப் பார்க்கிறார். அரச நிர்வாகச் செயற்பாடுகளில் தலையீடுகளை மேற்கொள்வது, தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகிப்பது என ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் காணப்பட்ட மோசமான செயற்பாடுகள் ரணிலிடமும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.