திடீரென மயங்கி விழுந்த 28 மாணவர்கள் உட்பட 31 பேர்

வவுனியாவில் மாணவ , மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் அதிதியாக கலந்து கொண்டு நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் பிரதான நிகழ்வு கொட்டகைக்கு முன்னால் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு தரப்பினர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால் வெயில் தாக்கம் காரணமாக 28 மாணவர்களும், 3 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாக 31 பேர் மயங்கமடைந்திருந்தனர்.

அவர்களை உடனடியாக செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டியில் வைத்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் வெயில் தாக்கம் காரணமாக 13 மாணவர்களும், 5 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாக 18 பேர் மயங்கமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிநடை வகுப்பு முடிந்தவுடன் அவர்களை அவ்விடத்திலிருந்து செல்வதற்கு அனுமதி வழங்குதல் அல்லது மாற்று வழிகளை மேற்கொள்ளவது சிறந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.