87 வருடங்களுக்கு பின்னர் சாதித்து காட்டிய பெண் அதிபருக்கு பாராட்டு-

பாறுக் ஷிஹான்
விளையாட்டு போட்டி எமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்திருக்கின்றது.இதில் வெற்றி தோல்விகளை தாங்கி கொள்கின்ற நிலையினை மாணவர் மத்தியில்  பெற்றோர்கள் ஆசிரியர்கள்   கற்று கொடுக்க வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு இவ்விடயங்களை ஊட்டுவதனால் எதிர்காலத்தில் தேவையற்ற பழக்கங்களில் இருந்து அவர்கள் விலகி     பிரகாசிக்க முடியும்    என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் 1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலத்தின்  முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டி   அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் திங்கட்கிழமை(7) மாலை  நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
இப்பாடசாலை வரலாற்றில் இன்று  மிக முக்கியமான நாளாக பதியப்படுகின்றது.அதாவது இப்பாடசாலையின் விளையாட்டு போட்டி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.கடந்த காலங்களில் இப்பாடசாலையில் பல அதிபர்கள் கடமையாற்றி இருந்த போதிலும் இவ்வாறான ஒரு விளையாட்டு போட்டி ஒரு மைதானம் இன்றி நடைபெற்றிருக்கவில்லை.இருந்த போதிலும் ஒரு மைதானமின்றி ஒரு பெண் அதிபரினால் பிரமாண்டமான விளையாட்டு போட்டி ஒன்றினை நடாத்த முடியும் என்றால் ஒரு சாதனை தான்.எமது வலயக்கல்வி சார்பாக அதிபரை நாங்கள் பாராட்டுகின்றோம்.மார்ச் 31 திகதிக்குள்  புதிய சுற்றுநிருபம் படி இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்க வேண்டும் என அதிபர்களுக்கு அறிவுறுத்தல்களை நாம் வழங்கி இருந்தோம்.
இருந்த போதிலும் ஒரு சில பாடசாலைகளே இவ்வாறான விளையாட்டு போட்டிகளை விரைவாக இது போன்று நடாத்தி இருந்தன.பல விளையாட்டு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட வளங்களை கொண்ட பாடசாலைகள் இவ்வாறான விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு முன்வராத சந்தர்ப்பத்தில் ஒரு பெண் அதிபராக இருந்து எவ்வித விளையாட்டு பயிற்சியாளர்கள் விளையாட்டு ஆசிரியர்கள் மைதானம்  இன்றி ஒரு பெண் அதிபராக இருந்து கொண்டு இவ்வாறான பிரமாண்டமான விளையாட்டு போட்டி நடாத்தி காட்டி இருக்கின்றமை ஒரு முன்மாதிரியான செயற்பாடாகும்.விசேடமாக  இப்பாடசாலை அதிபர் மஜீதியாவிற்கு வலயக்கல்வி பணிப்பாளர் என்ற ரீதியில் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த விளையாட்டு போட்டி எமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்திருக்கின்றது.இதில் வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டும்.இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலர் குதுகலிப்பார்கள். சிலர் சோர்ந்து போகின்ற நிலைமை காணப்படும்.ஆனால் இந்த விளையாட்டு போட்டி ஊடாக நாம் எதிர்பார்ப்பது நிறந்த ஆளுமை மற்றும் வெற்றி தோல்விகளை தாங்கி கொள்கின்ற நிலையினை மாணவர் மத்தியில் ஏற்படுத்துவதாகும்.இதனை பெற்றோர்கள் ஆசிரியர்கள் இவ்விளையாட்டு போட்டி ஊடாக இவற்றை கற்று கொடுக்க வேண்டும்.இவ்விளையாட்டு போட்டி சிறப்பாக நிறைவுற வழி ஏற்படுத்திய இறைவனுக்கும் நாம்  நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.குறிப்பாக எம் மத்தியில்  பெண் பிள்ளைகள் விளையாட கூடாது அல்லது விளையடுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளதை காணலாம்.ஆனால் இரண்டாம் நிலையில் கற்கின்ற போது நிச்சயமாக இந்த விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
இவ்வாறான விளையாட்டு மற்றும் பயிற்சிகள் இன்மையால் எம்பிள்ளைகள்  தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பதை காணலாம்.எனவே ஆரம்ப பிரிவில் இருந்து எமது பிள்ளைகளுக்கு உடற்பயிற்சி விளையாட்டு போன்ற விடயங்களை ஊட்டுவதனால் எதிர்காலத்தில் அவர்கள் பிரகாசிக்க முடியும் என்பதுடன் தேவையற்ற பழக்கங்களில் இருந்து அவர்கள் விலகி  இருப்பார்கள்.விளையாட்டு என்பது ஒரு சாதாரணமான விடயமல்ல.இங்கு  பெற்ற பயிற்சிகளை கொண்டு எதிர்காலத்தில் கோட்டமட்ட விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க வேண்டும்.இதன் மூலம் இப்பாடசாலைக்கு பெருமைகளை சேர்க்க வேண்டும்.இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது.மஜிடியா என்ற ஒரு பெண் சிங்கம் அதிபராக இருக்கின்றார்.அவருக்கு இந்த விளையாட்டு போட்டியில் சகலரும் உதவியது போன்று எதிர்காலத்திலும் உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டார்.
1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது  தனது முதலாவது இல்ல விளையாட்டுப்போட்டியை   அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் நடாத்தி இருந்தது.இங்கு தரம் 1 மதல் 5 வரையான 625 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.பாடசாலைக்கென விளையாட்டு மைதானம் இல்லாமையினால் 87 வருடங்களாக இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை.முதல் முறையாக இப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கல்முனைக்குடி கடற்கரை பகுதியை அண்டிய   பலாஹ் கடற்கரை மைதானம் என்று அழைக்கப்படும்  திடலில் விளையாட்டு போட்டி சிறப்பாக இடம்பெற்றன.
கற்றலுக்கு மாத்திரமன்றி மாணவர்களின் விளையாட்டு திறமைகளுக்கும் முன்னுரிமை அளித்து அப்பாடசாலை அதிபர் அவரது ஆசிரியர் குழாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் மற்றும் பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் நலன் விரும்பிகள் அனைவருக்கும் இணைந்து  பேர்ல்ட் டயமன்ட் எமரல்ட் என்ற 3 இல்லங்களை கொண்டும் கிடைக்கப்பெற்ற வளங்களை கொண்டும் மிக நேர்த்தியாக விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்.87 வருடங்களாக இப்பாடசாலைக்கு மைதானம் இன்மை காரணமாக  மாணவர்களுக்கு இல்ல விளையாட்டு செயற்பாடுகள் இன்றி காணப்பட்டது.இந் நிலையில் சுமார் 87 வருடங்களின்  பின் வரலாற்றை  தன்னகத்தை மாற்றிய பெண்மணியாக  அஸ்ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா பாடசாலை வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வில்ல விளையாட்டு போட்டியில் பேர்ல்ஸ் இல்லம் -341 புள்ளிகள் பெற்று( மஞ்சள் நிறம்) சம்பியனானதுடன்  கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக  கல்முனை வலயக் கல்விப்  பிரதி பணிப்பாளர் மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.