அட்டனில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் கைது

 

(அந்துவன்)

 

அட்டன் மல்லியப்பு பகுதியில் 6 கோடி ரூபாவுக்கு வலம்புரி சங்கை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11.02.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்கு மற்றும் கைதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அட்டன் – கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்படுகின்றார் என இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து விசேட அதிரடிப்படைக்கு இவ்விடயம் பற்றி தெரிவிக்கப்பட்டு, சந்தேக நபரை கைது செய்வதற்கு கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலம்புரி சங்கை வாங்குவதற்காக செல்லும் பாணியிலேயே சந்தேக நபர்கள் இருவரையும் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்கள் அட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.