நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில் இன்று டுவிட்டரில் விளக்கம்:கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்ல முடியாத ரணில், இன்று ருவிட்டரில் விளக்கம் கொடுக்கின்றார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணின் தேர்தல் பரப்புரை முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு வந்து ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்கும் நிலையில் தனது கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

அந்த கருத்துக்கு பலத்த விமர்சனங்கள் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படுகின்ற நிலையில் சமூக வலைத்தளமான ருவிட்டரில் அவர் நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அதில் உள்ளூராட்சித் தேர்தலை தான் மறுப்பதற்கான காரணம் சட்டரீதியானது என்பதை விளங்கப்படுத்த முயற்சித்துள்ளார்.

தேர்தல் நடத்தமுடியாது என்பது, காசு ஒதுக்கப்படாமல் இருப்பது அனைத்தும் சட்டவிரோதம். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் அரசியல்வாதிகளின் கையில் இருக்க முடியாது. ஒரு நம்பகத்தன்மையை கொண்டதாக தேர்தல் அமையவேண்டும் என்பதற்காகத்தான், தேர்தல் திணைக்களம் என்றும் தேர்தல் ஆணைக்குழு என்றும் சுயாதீன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டமைப்பு தேர்தல் நடக்கவேண்டும் என்று முடிவெடுக்குமாக இருந்தால் ஆட்சியில் இருக்கக்கூடிய எவரும் வந்து அந்த முடிவைக் கேள்விக்குட்படுத்தாமல் தேவைப்படும் நிதியை ஒதுக்கியாக வேண்டும்.

அனைத்தினையும் கேள்விக்குட்படுத்தும் வகையில் ரணில் விக்ரமசிங்க நடந்துகொள்ளும் சூழ்நிலையில் இந்த விளக்கம் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார்.

அது எங்கள் மக்களுக்கோ சிங்கள மக்களுக்கோ விளங்குவதான விளக்கம் அல்ல. அது சர்வதேசத்துக்கு. மார்ச் மாதம் ஜ.நா. மனித உரிமை பேரவையில் அமர்வுகள் தொடங்கி நடைபெறுகின்றன. நிச்சயமாக இலங்கை யு.பி.ஆர். சுழற்சி என்ற ஆய்வில் இலங்கை ஆய்வு செய்யப்பட்டு அதனது அறிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவையில் பேசப்படும்.

தங்கள் அணியைக் காப்பாற்றுவற்காக ஜனநாயகத்தையே கேள்விக்குட்படுத்தி தேர்தல் நடத்தாத வகையில் நிதியை முடக்கி அவருடைய ஜனநாயக விரோத செயற்பாடுகள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏதோ ஒருவகையில் தன்னை நியாயப்படுத்துவதற்காக ஒரு ஜனாதிபதி ருவிட்டர் ஊடாக தன்னுடைய விளக்கத்தைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்.

நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் சொல்லமுடியாமல் ஒரு ஜனாதிபதி பதவியின் பெறுமதியைக் காப்பாற்ற முடியாத நிலைக்கு அவர் நிலைமை காணப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க இன்றுதான் இந்த போகம் எடுத்தவர் அல்லர் என்பது உண்மை .இது தான் உண்மையான ரணில.; இவரின் பண்புகளைத் தமிழர்கள் நாங்கள் 2001 ஆம் ஆண்டு நன்கு அறிந்தோம். – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.