மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை ; யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு வந்திருந்தன.

இதேநேரம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக கொரோனா நோயாளர்கள் பாவிக்கும் அனைத்து உடைமைகளும் எரிக்க வேண்டிய நிலை காணப்பட்டதால், அதிகளவில் மருத்துவக் கழிவுகள் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் எரியூட்டி இயந்திரத்தில் ஏற்பட்ட திருத்த வேலை காரணமாக தொடந்து தெல்லிப்பழையில் எரிப்பதில் இடர்பாடான நிலை காணப்படுகிறது.

இப்போது நாம் வைத்தியசாலைக்கு என தனியான ஓர் எரியூட்டி இயந்திரத்தைப் பெற்று வைத்தியசாலைக்கு அண்மையில் பொருத்தி பாவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு யாழ்ப்பாண மாநகர சபையுடன் கலந்துரையாடி கோம்பையன் பகுதியில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைத்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளுநரின் செயலாளரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் கிடைக்கப்பட்டுள்ளது. கோம்பையன் பகுதியானது எரியூட்டி அமைப்பதற்கு பொருத்தமான இடம் இல்லை எனவும் மாற்று இடம் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண ஆளுநருடன் இந்த விடயம்தொடர்பில் கலந்துரையாட உள்ளோம். அதேபோல் அந்த நிலைமை கைகூடும் வரை வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தனியார் நிறுவனங்கள் மூலம் எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எரியூட்டி நிலையத்தை அமைத்து அதனை செயற்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிதி தேவைப்படும். அதேபோல மருத்துவக் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வைத்தியசாலைகளில் தேங்க விடாது தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து எரிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் இந்த மருத்துவ கழிவுகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. வழமை போல் வைத்தியசாலையில் சேவைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. வழமைபோல் பொதுமக்கள் நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொள்ள முடியும். எந்த ஒரு வைத்தியசாலையிலும் மருத்துவ கழிவு என்பது இன்றியமையாத ஒரு விடயமாகும்.

எனினும் விரைவில் எமது வைத்தியசாலைக்கென தனியான எரியூட்டி ஒன்று அமைப்பதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.