இணைந்த வடகிழக்கில்தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – எஸ்.வியாழேந்திரன்

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனவும் இணைந்த வடக்கு கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் எனவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி மீகாவெல் பாலர் பாடசாலையின் மாணவர் பிரியாவிடை நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் –

நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற -நாசமாக்க நினைக்கின்ற – இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடக்கு கிழக்கு பிரச்சினையை ஒரு தீர்வாகக் கொண்டு வந்தது. வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடக்கு கிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது.

இந்த வடக்கு கிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரகாதியாக இருந்த கட்சி ஜேவிபி கட்சியாகிய மக்கள் விடுதலை முன்னணி ஆகும். இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார் .

எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று சம்பந்தன் தெரிவித்தமைக்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்துள்ளார்.

கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நில வள பொருளாதார இருப்பைத் தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது.

ஆகவே, வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பைப் பாதுகாக்க முடியும். இணைந்த வடக்கு கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும் .

இணையாத வடக்கு கிழக்கில் காணி பொலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகனம் ஓரளவு தப்பி பிழைக்கலாம் கிழக்கு தப்பி பிழைக்காது.

காணி பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில ஏற்கத்தகாத நடவடிக்கைகள். சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணை போகின்ற தன்மை. சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை இணைந்த வடக்கு கிழக்கு இல்லாமல் தனியாகக் கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நாங்கள் உறுதியாகச் சொல்லுகின்றோம். வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும். இணைந்த வடக்கு கிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சீர் திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இணைந்த வடக்கு கிழக்கினால்தான் கிழக்கைப் பாதுகாக்க முடியும் கிழக்கை பாதுகாத்தால் தான் வடக்கு கிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன். – எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.