உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஏப்ரல் இடம்பெறலாம் – சன்ன ஜயசுமன

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆம் திகதிகளில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை விடுவிப்பதை தடுக்கும் வகையில் திறைசேரியின் செயலாளர் செயற்பட்டார். ஜனாதிபதியின் அழுத்தத்தின் பிரகாரமே திறைசேரியின் செயலாளர் செயற்பட்டிருப்பார்.

தேர்தலுக்கு தடையேற்படுத்த வேண்டிய தேவை திறைசேரியின் செயலாளருக்கு கிடையாது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் தேவை ஜனாதிபதிக்கும்,அரசாங்கத்திற்கும் உண்டு.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராகவும்,மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சார்பாகவும் காணப்படுகிறது. நாட்டு மக்களின் அடிப்படை வாக்குரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 07 அல்லது 08 ஆகிய தினங்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதால் தேர்தலை நடத்துவது சிக்கலைத் தோற்றுவிக்கும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடலாம்.

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆகவே பண்டிகை காலம் என்பது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஒரு தடையாக அமையாது.

தேர்தல் இடம்பெறாது என்ற நம்பிக்கையில் ஆளும் தரப்பினர் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்த நிலையில் உள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறாது என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை முழுமையாக பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.