கோபால்சுவாமி பார்த்தசாரதியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார். பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு, பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.

அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பனிப்பாளராகவும் கடமையாற்றிவருகிறார்.

கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.